மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாகன சோதனையின் போது வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை, வாள்கள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை அருகே முத்தனேந்தலில் மதுரை-ராமேஸ்வரம் சாலையில் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், சார்பு ஆய்வாளர்கள் முருகானந்தம்,திருமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் திருப்புவனம் ஒன்றியம் தூதை கிராமத்தைச் சேர்ந்த ராபின்சிங், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
இவர்கள் பல ஊர்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டரைப்பவுன் தங்கச் சங்கிலி, திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனங்கள், ஒரு செல்போன், இரு வாள்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட ராபின்சிங், சதீஷ்குமார் மீது மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக டி.எஸ்.பி கண்ணன் தெரிவித்தார்.