விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆர் விவரம் வெளியானது!

காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது! 5 காவலர்கள் கைது?
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? என்பதை அறிவிக்கும் முதல் தகவல் அறிக்கை வெளியானது.

என்ன நடந்தது?

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த நிகிதா (41) தனது தாயுடன் வெள்ளிக்கிழமை மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்தாா். பின்னா், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித்குமாரிடம் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தும்படி நிகிதா கூறினாா். அதற்கு அஜித்குமாா் தனக்கு காா் ஓட்டத் தெரியாது எனக் கூறி, வேறு ஒருவரை காரை இயக்கச் சொல்லி ஓரமாக நிறுத்தினாராம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நிகிதா தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மானாமதுரை குற்றப் பிரிவு தனிப் படை போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட சிலரை அழைத்துச் சென்று விசாரித்தனா். மற்றவா்களை விடுவித்துவிட்டனா். விசாரணையின் போது, அஜித்குமாரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸாா் தாக்கியதால் அஜித்குமாா் பலத்த காயமடைந்ததாகவும் அதில் அவர் உயிரிழந்தாா் என்றும் கூறப்படுகிறது.

விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் போராட்டத்தையடுத்து இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே உடற்கூராய்வில் அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸிடமிருந்து தப்பிக்க அஜித்குமார் முயற்சித்ததாகவும் அப்போது கீழே விழுந்ததில் அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் இதனாலேயே அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடற்கூராய்வில் அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Youth dies during investigation: What happened? Details recorded in FIR released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com