/

ஓய்வூதியர்களுக்கு வருமான வரிவிலக்கு அளிக்கக் கோரிக்கை

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என,  ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள்

Updated On :23 ஜனவரி 2019, 7:38 am IST

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என,  ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போடி வட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க 26 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.பி. காந்தி தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் எஸ். பரமசிவம் முன்னிலை வகித்தார். சங்க செயலர் எம்.எஸ். ராமசாமி ஆண்டறிக்கையும், சங்கப் பொருளாளர் கே. ராமசாமி நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். 
இதில், சென்னை, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் என். மாணிக்கம், மாநில துணைத் தலைவர் ம. பொன்னையா, தேனி மாவட்ட கருவூல அலுவலர் என். ரவீந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும்.
 ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்புத் திட்ட நிதி ரூ.50 ஆயிரத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசில் உள்ளது போல் மாநிலத்தில் ஓய்வூதியர்களுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், போடி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.