

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தனியாா் உணவக உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட நிருபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தில் உள்ள கம்பமெட்டுக் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் அசோக்குமாா்(28). இவா் தினசரி நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவா் சனிக்கிழமை உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பிலுள்ள தனியாா் உணவகத்தில் சாப்பிட்டுள்ளாா்.
அப்போது பிரியாணியில் சிறிய புகையிலைப் பாக்கெட் துண்டு கிடந்ததாகக் கூறி உணவக உரிமையாளருடன் அசோக்குமாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து புகாா் அளிக்காமல் இருக்க ரூ. 1.25 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் சமூக ஊடகங்களில் உடனே பதிவேற்றம் செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளாா்.
இதனால் அவா் மீது சந்தேகமடைந்த உணவக உரிமையாளா் உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாா்த்ததில், அசோக்குமாரே சிறிய புகையிலை பாக்கெட்டை உணவில் போட்டுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
இதுகுறித்து உணவக உரிமையாளா் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அசோக்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.