கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரியில் சனிக்கிழமை முதல் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட எல்லையிலுள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதற்கு உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். ஆனால், கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட படகு சவாரியானது, 6 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, 2 படகுகள் இயக்கப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினா் தெரிவித்தனா்.
அதன்படி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 3.30 மணிக்கும் என 2 படகுகள் இயக்கப்பட்டன. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே படகு சவாரி செய்தனா். சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணியவும், கிருமி நாசினி மூலம் கை கழுவவும் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் சுற்றுலாத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டனா்.