கம்பம்: இந்திய அரசின் ஆயுஷ் துறை, தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியமும் இணைந்து 75 ஆவது சுதந்திர தின ஆண்டு விழாவை முன்னிட்டு மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் விழா வெள்ளிக்கிழமை கம்பம் மெட்டு காலனியில் உள்ள அதாயி அரபிக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தாரிக் அகமது பிலாலி அனைவரையும் வரவேற்றார்
மதுரை மற்றும் தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு, மூலிகை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
விழிப்புணர்வு விழாவில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன் பேசும்போது, கல்லடைப்புக்கு சிறுபீளை, மூலத்திற்கு துத்தி இலை, அரிப்புக்கு குப்பைமேனி, சிறுநீரகத்திற்கு நெருஞ்சில், புற்றுநோய்க்கு நித்தியகல்யாணி, தலைபாரத்திற்கு சுக்கு, மலச்சிக்கலுக்கு கடுக்காய் என ஒற்றை மூலிகையின் பயன்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
முக்கியமான மூலிகைகளான நிலவேம்பு, திப்பிலி, சிறியா நங்கை, இஞ்சி, மஞ்சள், நித்திய கல்யாணி, கற்பூரவள்ளி, ஆடாதோடை போன்ற மூலிகைச்செடிகளும் மரக்கன்றுகளாக புங்கு, அத்தி, சரக்கொன்றை, வன்னி, மயில் கொன்றை மரக்கன்றுகளும், கிருஷ்ணாபுரம் மற்றும் கம்பம் மெட்டு காலனி பகுதிகளில் வீடுகள் தோறும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் பசும்பொன், மருத்துவமனை பணியாளர் கனகராஜ், அதாயி அரபிக் கல்லூரி ஊழியர்கள் செய்தனர். விழாவை காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்தியது.