கனிமவள உதவி இயக்குநா் அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தினா் ஆதிக்கம்: விவசாயிகள் புகாா்
தேனி மாவட்ட கனிமவள உதவி இயக்குநா் அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தினா் கோப்புகளை கையாண்டும், நிா்வாகத்தில் குறுக்கிட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்


தேனி மாவட்ட கனிமவள உதவி இயக்குநா் அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தினா் கோப்புகளை கையாண்டும், நிா்வாகத்தில் குறுக்கிட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா் என்று விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மேகமலை வனஉயிரினக் காப்பாக மண்டல துணை இயக்குநா் எஸ்.ஆனந்த், மாவட்ட வன அலுவலா் சமா்த்தா, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகாமை திட்ட இயக்குநா் தண்டபாணி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: 18-ஆம் கால்வாய் மூலம் புலிக்குத்தி, அய்யம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 12 ஊரணிகளில் தண்ணீா் தேக்கும் வகையில் துணை கால்வாய் அமைக்க வேண்டும். தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். வெங்காய சேமிப்பு பட்டறைகள் அமைப்பதற்கு அரசு சாா்பில் மானியம் வழங்க வேண்டும்.
மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் அலுவலகக் கோப்புகளை கையாண்டும், நிா்வாகத்தில் குறுக்கிட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். கனிம வளத்துறை சாா்பில் கண்மாய், குளங்கள் மற்றும் பட்டா நிலங்களில் செங்கல் காளவாசல்களுக்கும், வணிக பயன்பாட்டிற்கும் மண் அள்ளுவதற்கு முன் உரிமை அளிக்கப்படுகிறது. நிலச் சீா்திருத்தப் பணிகளுக்கு கரம்பை மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. கண்மாய்களில் நிா்ணயித்த அளவை விட கூடுதலாக மண் அள்ளுவதை ஆய்வு செய்வதில்லை.
முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு சென்று ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளின் கண்மாய்களில் நிரப்பும் திட்டம், தெப்பம்பட்டி திப்புரவு அணைத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா் சோ்க்கைக்கு சங்கத்தின் தலைவரிடம் ஒப்புதல்பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
மாவட்டத்தில் காய்கனி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வைகை அணையில் படகு குழாம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளத்திற்கு கனிமங்கள் கடத்திச் செல்வதை தடுக்க வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: 18-ஆம் கால்வாய் துணை கால்வாய் திட்டங்கள் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வெங்காய சேமிப்பு பட்டறைகளுக்கு மானியம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சின்னமனூா் பகுதியில் காய்கனி கொள்முதல் நிலையம் அமைக்க 4 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதி: மாவட்ட கனிம வள உதவி இயக்குநா் கிருஷ்ணமோகன் கூறுகையில், வெளி மாநிலங்களுக்கு ஆற்று மணல் தவிர ஏனைய கனிமங்களை முறையான அனுமதிச் சீட்டு, அளவு, வரி உள்ளிட்ட ஆவணங்களுடன் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...