கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில் கழிவு நீர் சாக்கடை கட்டுவதற்காக இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலை சந்திப்பில் தொடங்கி செல்லாண்டியம்மன் கோயில், ஐசக் போதகர் தெரு செல்லும் சாலை வரையில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் தண்ணீர் செல்லமுடியாமல் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் செல்லாண்டியம்மன் மற்றும் ஐசக் போதகர் தெரு மக்கள் துர்நாற்றத்தில் சிக்கியும் தொற்று நோய் பரவும் அபாயத்தில் இருந்தனர்.
இந்த பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் சாக்கடை அமைத்து தண்ணீர் குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் எதிரொலியாக நகராட்சி மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. முன்னதாக ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைக்காரர்கள் தாங்களாக முன் வந்து அகற்றினர் கொண்டனர். சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
ஆக்கிரமிப்பின் போது நகராட்சி கட்டட ஆய்வாளர் சலீம், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வைரக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.