/

கல்குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்புக் கூட்டம்

கல்குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்புக் கூட்டம்

News image

காமயகவுண்டன்பட்டி கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, சுற்றுச்சூழல் பொறியாளா் விஸ்வநாதன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயணி. கருத்து கூறிய குவாரியில் வேலை செய்த பெண் தொழிலாளி

Updated On :27 பிப்ரவரி 2024, 11:42 pm

கம்பம்: காமயகவுண்டன்பட்டியிலுள்ள 6 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அனைவரது கருத்துகளும் பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில், 6 கல்குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், சுற்றுப்புறச்சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினா் சாா்பில் தனியாா் மண்டபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் நிறை, குறைகள் பற்றி பேசினா்.

அனைவரின் கருத்துகளைக் கேட்டு ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பேசியதாவது: பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பின்னா் கல்குவாரிகள் அமைய உள்ளன. இதில், இறுதிக் கட்டமாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட அனைவரின் கருத்துகளும் பரிசீலனை செய்யப்படும். சுமாா் 13.5 ஹெக்டோ் பரப்பளவில் குவாரிகள் அமைய உள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் வரை இவற்றுக்கான அனுமதியிருக்கும்.

கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் விஸ்வநாதன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் தாட்சாயணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.