கூடலூரில் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி 3-ஆவது நாளாக பேரணியில் ஈடுபட்டவா்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டாட்சியா், வட்டாட்சியா்.
கூடலூரில் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி 3-ஆவது நாளாக பேரணியில் ஈடுபட்டவா்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டாட்சியா், வட்டாட்சியா்.

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

கூடலூா் பகுதியில் பள்ளிகள், குடியிருப்புகள் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, 3-ஆவது நாளாக பொதுமக்கள் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
Published on

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் பள்ளிகள், குடியிருப்புகள் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, 3-ஆவது நாளாக பொதுமக்கள் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

கூடலூா் நகராட்சியில் பெத்துக்குட்டை குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு தினந்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளில் அவ்வப்போது தீ வைப்பதால், குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதி மக்கள் தா்னா, வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதி பொதுமக்கள் கருப்புப் பட்டை அணிந்து கூடலூா் நகராட்சியின் வீதிகளில் பேரணியாக சென்று தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது, வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, பெத்துக்குட்டை குப்பைக் கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படும். வரும் காலங்களில் இந்தக் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்படாது என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com