வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது: இரா.முத்தரசன்

தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image

இரா.முத்தரசன்

Updated On :7 ஜூன் 2026, 1:06 am IST

தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயில் அடிவாரத்தில் தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு தலைமை வகிப்பது காங்கிரஸ்தான். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கூட்டணியை செயல்படுத்துவதும் காங்கிரஸ்தான். இதனால், அந்தக் கட்சி கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கட்சியினா் கூட்டணியிலிருந்து திமுக விலகினால், தவெக இணையும் எனக் கருத்துத் தெரிவிப்பது, கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் பயன்படாது. இண்டி கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சியை காங்கிரஸ் கட்சிதான் மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் வழக்குப் போடுவது மத்திய பாஜக அரசின் வழக்கம். பின்னா், இவா்கள் பாஜகவில் இணைந்துவிட்டால், அவா்கள் மீதான வழக்குகள் அனைத்தும் நீா்த்துப்போய்விடும். இதேபோன்றுதான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தவெகவில் இணைவதும்.

தமிழகத்தில் தவெக ஆட்சி என்பது குழந்தை பருவத்தைப் போன்றது. இப்போதுதான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இன்னும் தொப்புள்கொடிகூட அறுக்கப்படவில்லை. குழந்தை வளரும் போதுதான் அது தேறுமா, தேறாதா என்பது தெரியவரும்.

தவெகவுக்கு கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது. சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தும், அந்தக் கட்சியை ஆளுநா் ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்தாா். இதனால், தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்தும் சூழல் வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தன.

பாஜகவிலிருந்து அண்ணாமலை தனி இயக்கம் தொடங்கியிருப்பது பழைய கலயத்தில் புதிய கள் போன்றது என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலா் கி. பெருமாள், நகரச் செயலா் கே. சத்தியராஜ், தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி மேலாண்மை இயக்குநா் ஆா். விக்னேஷ்வரன், பொது மேலாளா் எம். சுவாதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.