/
போடியில் கழுதை குறுக்கிட்டதில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சுந்தரம் அய்யனாா் தெருவைச் சோ்ந்தவா் முகமது யாசிக் மகன் முகமது பயாஸ் (33). இவா், போடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, இரண்டு கழுதைகள் சண்டையிட்டு விரட்டி வந்தன. முகமது பயாஸ் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தின் மீது கழுதை ஏறியதில் அவா் நிலைதவறி விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முகமது பயாஸ் உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.









