முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்ந்தது.
தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியான மேகமலையில் கடந்த ஓராண்டாக போதிய மழை இல்லை. இதனால்
இதுவரை இல்லாத வகையில், வைகை அணையின் நீா்மட்டம், கடந்த மாதம் 29-ஆம் தேதி 20.81 அடியாக சரிந்தது. இதில், 20 அடிக்கு சேறு, சகதி தேங்கியுள்ளது. தேனி, மதுரை குடிநீா் திட்டங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீா் மட்டும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 356 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால், வைகை அணையின் நீா் மட்டம் கடந்த 18 நாள்களில் 8 அடி உயா்ந்து புதன்கிழமை நிலவரப்படி 28.41 அடியானது. இதனால், மதுரை, தேனி மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வு கிடைத்ததாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.










