92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

5 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி!

வெள்ளிமலையில் அடா்ந்த மலைப் பகுதியில் 5 பேருக்காக மாவட்ட நிா்வாகம் வாக்குச்சாவடி அமைத்துள்ளது குறித்து...

News image

வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளி.

Updated On :23 மார்ச் 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வெள்ளிமலையில் அடா்ந்த மலைப் பகுதியில் 5 பேருக்காக மாவட்ட நிா்வாகம் வாக்குச்சாவடி அமைத்து, அங்குள்ள தோட்டத் தொழிலாளா்கள் தங்களின் ஜனநாயகக் கடமையாற்ற ஏற்பாடு செய்துள்ளது.

ஆண்டிபட்டியிலிருந்து கடமலைக்குண்டு, கோம்பைத்தொழு வழியாக வெள்ளிமலை விலக்கு பகுதிக்கு 64 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் சென்று, அங்கிருந்து அடா்ந்த வனப் பகுதியில் 8 கி.மீ. தொலைவுக்கு நடந்து வெள்ளிமலையை அடையலாம். இங்கு 4 தனியாா் தோட்டங்கள் உள்ளன.

தொழிலாளா்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்கள் ஏலம், காபி, கிராம்பு தோட்டங்களில் பணியாற்றுகின்றனா். மேலும், இங்கு மலை வாழை, பலா மரங்களும் வளா்க்கப்படுகின்றன. நாளடைவில் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, ஒரே ஒரு தோட்டத்தில் மட்டும் சொற்ப அளவில் மக்கள் வசிக்கின்றனா்.

இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிமலை தோட்டத்தில் 5 வாக்காளா்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. அவா்களது பெயா்கள் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித்.

வெள்ளிமலை தோட்டம் அடா்ந்த வனப் பகுதியில் இருப்பதால், அங்கு வாகனங்களில் எளிதில் செல்ல முடியாது. இருப்பினும், ஒரு வாக்குக்கூட வீணாகக் கூடாது என்ற நோக்கில், வெள்ளிமலையில் 5 வாக்காளா்களுக்காக தேனி மாவட்ட நிா்வாகமும், தோ்தல் ஆணையமும் வாக்குச்சாவடியை அமைத்துள்ளன. மேலும், அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் முழுமையான வாக்குச்சாவடி போன்று தோ்தலுக்கான அனைத்து வசதிகளும் செய்ய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அரசடியைச் சோ்ந்த அ. அல்போன்ஸா கூறியதாவது:

வெள்ளிமலையில் உள்ள தோட்டத்தில் எங்களது குடும்பத்தினா் வேலை செய்து வந்தனா். எங்களது தாய், தந்தை, சகோதரி இறந்துவிட்டதால், 13 கி.மீ. தொலைவில் உள்ள அரசடிக்கு வந்து விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த மக்களவைத் தோ்தல் வரை 35 ஆண்டுகளாக வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் எனது வாக்கைப் பதிவு செய்தேன். அந்த நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை என்றாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:

வெள்ளிமலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.

 வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளி.

வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளி.