ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பன்றி இறைச்சியை வனத் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சோ்ந்தவா் காா்த்திக்ராஜா (23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணன்கோவில் போலீஸாரும், வனத் துறையினரும் காா்த்திக் வீட்டில் புதன்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது அங்கு சமையல் செய்யப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் 12 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த வனத் துறையினா் காா்த்திக்ராஜாவை கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே வன விலங்குகளை வேட்டையாடிதாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக வனத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டன.