பெருமாள் கோயில்களில் பகல் பத்து நிறைவையொட்டி பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காரைக்கால் நகரில் அமைந்துள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல்பத்து, இராப்பத்து உத்ஸவம் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த டிச.19-ஆம் தேதி முதல் (பகல் பத்தாக) தினமும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் புறப்பாடு நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகனாவதார அலங்காரத்தில் பெருமாள் வியாழக்கிழமை மாலை மாட வளாகம் புறப்பாடு செய்யப்படுகிறார்.
பகல் பத்து நிகழ்ச்சிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை காலை 5 முதல் 6 மணிக்குள் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி முதல் தொடர்ந்து 10 நாள்கள், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் இரவு நேரத்தில் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறார். இது இராப் பத்தாக நடத்தப்படுகிறது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பக்தர்கள் எளிதாக மூலவரையும், உத்ஸவரையும் வழிபாடு செய்ய கோயிலுக்குள் வரிசை அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.
இதுபோன்று மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராம பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.