புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு: உடனடியாக திரும்பப் பெற திமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை கூறியது: புதுச்சேரியில் அண்மையில் பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த முடிவு அனைத்துத் தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. ஆளும் கட்சிக்கு திமுக முக்கியமான ஆதரவு கட்சியாகும். அரசு பொறுப்பேற்ற பின்னர் வீட்டு வரி, சொத்து வரி ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. இதுபோன்ற முடிவு எடுக்கும் தருணத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். இப்போது புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அரசு ஏறக்குறைய 100 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு செய்துள்ளது. பேருந்து கட்டண உயர்வால் புதுவையின் அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாகப் பாதிக்கப்படுவர். ஒருபுறம் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. என்ற வரி நிர்ணயத்தால் துன்பத்தை சந்தித்து வரும் வேளையில், மாநில அரசின் இந்த தடாலடி நடவடிக்கை யாராலும் ஏற்க முடியாது.
இதுபோன்று மக்கள் வெகுவாக பாதிக்கப்படும் வகையிலான முடிவு எடுக்கும் முன்பாக, கூட்டணிக் கட்சியான திமுகவிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். எனவே உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை புதுச்சேரி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக தலைமையின் அனுமதி பெற்று கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றார் நாஜிம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com