உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அமலின்போது காரைக்கால் வணிகர் சங்கம் கடையடைப்புப் போராட்டம் நடத்தாமல் தவிர்த்தது ஏன் என சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் செயலர்கள் இசட்.எம்.தாஹிர், எம்.பக்கிரிசாமி ஆகியோர் கூட்டாக வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம் :
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் எந்தவித கடையடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை அது கடைப்பிடிக்கப்படுகிறது.
காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மொத்தமுள்ள 350 வணிகர்களிடம் வணிகர்கள், பொதுக்குழுவிடம் முறையான ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக முதல் முறையாக 24 மணி நேரம் கடையடைப்புப் போராட்டத்தை கடந்த 20-ஆம் தேதி நடத்தியது.
தன்னிச்சையாக கடையை திறக்க முன்வந்தோரை, சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு தொடர்பில்லாத சிலரும், நில வணிகர்கள் சிலரும் இணைந்து அச்சுறுத்தி, கடையை மூடச் செய்தனர். சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு தொடர்பில்லாதவர்களுடன் இணைந்து, வணிகர்கள், பொதுமக்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் 24 மணி நேர போராட்டம் நடத்தியது, எதிர்காலத்தில் அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு 24 மணி நேர போராட்டம் நடத்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாக அமைந்துவிட்டது.
மாநில அரசு சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக ஒப்புதல் அளித்தும், போராட்டத்தை குறித்த நாள்கள் தள்ளிவைக்காமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் ஜி.எல்.ஆர். என்கிற நில வழிகாட்டல் மதிப்பு முந்தைய ஆட்சியில் உயர்த்தப்பட்டது. இதனை சரிசெய்யும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசால் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவை செய்து வணிகர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, காரைக்காலில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இதுபோன்ற கடை அடைப்புப் போராட்டம் 24 மணி நேரம் நடத்தாமல் தவிர்த்ததன் உள்நோக்கம் என்ன ?
வணிகர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸ், மற்றவர்கள் துணையோடு வணிகர்களை அச்சுறுத்தும் போக்கை கடைப்பிடிப்பதை கைவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.