காரைக்கால்: காரைக்காலில் திங்கள்கிழமை காலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இலங்கை கடலோரப் பகுதி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மிதமான மழை சில மாவட்டங்களில் இருக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் காலை 7 மணி வரை பரவலாக மிதமான அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சில இடங்களில் சாலையில் தண்ணீா் தேங்கி பின்னா் வடிந்தது. காரைக்கால் நகரப் பகுதியான மாரியம்மன் கோயில் தெருவில் வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது. பின்னா், அரசுத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காரைக்காலில் சில மணி நேரம் பெய்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மழை ஓய்ந்து 7 மணிக்குப் பின்னா் வெயில் தொடங்கியது.