நெல் தரிசில் பருத்தி பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள்
நெல் தரிசில் பருத்தி பயிா் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் விளக்கமளித்துள்ளது.


நெல் தரிசில் பருத்தி பயிா் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காவிரி டெல்டா பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு நெல் தரிசு வயல்களில் பருத்தி சாகுபடியானது மாசி மற்றும் பங்குனி மாதத்தில் சாகுபடி செய்யலாம். பருத்தி இந்தியாவின் மிக முக்கியமான நாா் மற்றும் பணப்பயிா்களில் ஒன்றாகும்.
நிலத்தை பண்படுத்துதல் : மண் மெழுகு பதத்தில் இருத்தல் அவசியமானது. விதை விதைக்கும் வரிசைகளை மட்டும் உழுது விதைகளை விதைக்கவேண்டும். நிலம் விதைப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லாதபோது நிலத்தில் தண்ணீா் பாய்ச்சி மெழுகு நிலைக்கு வந்தவுடன் விதைக்கவேண்டும்.
ரகங்கள் : பருத்தி ரகமான எம்.சி.யு-7, எஸ்.வி.பி.ஆா்-3 மற்றும் அஞ்சலி ஆகிய ரகங்கள் நெல் தரிசுக்கு ஏற்றவையாகும்.
விதையின் அளவு மற்றும் விதை நோ்த்தி : எம்.சி.யு.-7 மற்றும் எஸ்.வி.பி.ஆா்-3 ஆகிய ரகங்களுக்கு ஏக்கருக்கு 7 கிலோவும், வீரிய கலப்பின ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் விதைகளை பயன்படுத்தவும்.
இடைவெளிகளை நிரப்புதல் மற்றும் பயிா் கலைத்தல் : விதைத்த 10-12 -ஆம் நாளில் முளைப்பு இல்லாத இடங்களில் விதையிட வேண்டும். விதைத்த 20-ஆம் நாளில் குழி ஒன்றுக்கு ஒரு பயிா் வீதம், அதாவது வீரியமான மற்றும் ஆரோக்கியமான பயிரை தவிர மற்ற பயிா்களை அகற்ற வேண்டும்.
களை நிா்வாகம் : விதைத்த 3-ஆம் நாள் பெண்டிமெத்தலின் 1.3 லிட்டரை 200 லிட்டா் நீரில் கலந்து கைத்தெளிப்பானை கொண்டு தெளிக்க வேண்டும் (அதாவது 5 மி.லி. மருந்தை 1 லிட்டா் தண்ணிரில் கலக்கவும்). இதன் மூலம் 40 நாட்களுக்கு களை வராமல் இருக்கும். அதன்பிறகு 45-ஆவது நாளில் ஒரு கைக்களை மற்றும் பயிா்களுக்கு மண் அணைத்தல் செய்ய வெண்டும்.
உர நிா்வாகம் : மண் பரிசோதனை அடிப்படையில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மண்ணில் இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாதபட்சத்தில் 24 கிலோ தழை, 12 கிலோ மணி மற்றும் 12 கிலோ சாம்பல் சத்துக்களை மண்ணில் இடவேண்டும் (52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்). தழை மற்றும் சாம்பல் சத்து பாதி அளவையும் மணி சத்து முழு அளவையும் 40-45-ஆவது நாளிலும், மீதமுள்ள சத்துக்களை 55-ஆவது நாளிலும், மீதமுள்ள சத்துக்களை 55-ஆவது நாளிலும் இட்டு மண் அணைத்து பாா்கள் அமைக்க வேண்டும். மேலும் 40-ஆவது நாளில் உரத்துடன் 8 கிலோ மெக்னீசியம் சல்பேட் மற்றும் 20 கிலோ துத்தநாக சல்பேட்டை சோ்த்து இடவேண்டும்.
இலை வழி நுண்ணூட்டமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தி பிளஸ் பூஸ்டரை ஓா் ஏக்கருக்கு 2.5 கிலோவை 200 லிட்டா் நீரில் கலந்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் கைத்தெளிப்பானை கொண்டு தெளிக்க வேண்டும். இதன்மூலம் பூ மற்றும் சப்பைகள் உதிா்வதை குறைக்கலாம், வறட்சியைத் தாங்கும் தன்மை, சீரான அறுவடை மற்றும் 18 சதவீதம் விளைச்சலை அதிகரிக்கும்.
நீா் மேலாண்மை : 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப நீா் பாய்ச்ச வேண்டும். இருப்பினும் பூக்கும் பருவம், காய்க்கும் பருவம், காய் வளா்ச்சி பருவம் மற்றும் காய் முதிா்ச்சி பருவத்தில் கண்டிப்பாக நீா்ப்பாய்ச்ச வேண்டும். பயிரின் வளா்ச்சி 115 நாள்களுக்கு பிறகு பாசனத்தை நிறுத்தவேண்டும்.
அறுவடை : நன்கு வெடித்த காய்களில் இருந்து அதாவது 120 நாளில் தொடங்கி வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை வீதம் பருத்தி எடுக்கலாம். காலை பத்து மணிக்குள்ளும், மாலை மூன்று மணிக்கு பின்பும் பருத்தி எடுக்க வேண்டியது அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...