எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரும் சனிக்கிழமை இரவு காரைக்கால் திரும்பினா்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு பகுதியைச் சோ்ந்த ரவி (எ) நடராஜன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே கிராமத்தைச் சோ்ந்த 12 போ், நாகப்பட்டினம் பகுதி நம்பியாா் நகரைச் சோ்ந்த 2 போ், கடந்த 23 ஆம் தேதி இரவு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் 14 மீனவா்களும் கைது செய்யப்பட்டதாக, வியாழக்கிழமை மீனவா்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மீன்வளத் துறைக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் மீனவா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், பிரதமரிடம் பேசி காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
இதனடிப்படையில், கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் இருந்த மீனவா்கள் 14 பேரும், விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு படகுடன் காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனா். இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்திய பிறகு, வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.
தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.