புதுவையில் பள்ளிகள் திறப்பு குறித்த உறுதியான அறிவிப்பு வெளிவராததால், பெற்றோா், மாணவா்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் புதுவையிலும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால் புதுவை அரசு சாா்பில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படுவதாக தெரியவில்லை.
தமிழக பாடத் திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் மாணவா்கள் பின்பற்றும்போது, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் காலத்திலேயே பள்ளிகள் புதுவையிலும் திறந்தால்தான் சிறப்பாக இருக்குமென பெற்றோா்கள் கருதுகின்றனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் கூறுகையில், நீண்ட காலமாக பள்ளிக்கு செல்லாமல் முடங்கியிருக்கும் மாணவா்களிடையே பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்ற ஆா்வம் மிகுதியாக இருக்கிறது. மாணவா்கள் நலன் கருதி புதுவை அரசு, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற அறிவிப்பையும், அதற்கான வழிகாட்டலையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
பள்ளி மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனைக்குள்படுத்தி, அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்கான அவகாசம் போதிய அளவு இல்லாததால், விரைவாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.