/

இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய காரைக்கால் மீனவர்கள் மீட்பு

 காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கினர். இவர்களை காரைக்கால் மேடு மீனவர்கள் மீட்டு காரைக்காலுக்கு அழைத்து வருகின்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:19 am

DIN

காரைக்கால்:  காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கினர். இவர்களை காரைக்கால் மேடு மீனவர்கள் மீட்டு காரைக்காலுக்கு அழைத்து வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 18-ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம் (40), வேலுச்சாமி (55), செந்தில் (38), கீழகாசாக்குடி மேட்டைச் சேர்ந்த ராமசாமி (52),  ராஜ்குமார் (30) ஆகிய ஏழு பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் 20-ஆம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் திங்கள்கிழமை மாலை அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இவர்களை கண்டறிய காரைக்கால் மேடு மீனவப் பஞ்சாயத்தார்கள், காரைக்கால் கடலோர காவல் நிலையம், இந்திய கடலோரக் காவல்படையினரிடம்  புகார் அளித்தனர். 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மேற்கண்ட மீனவர்கள் படகில் தவித்துவருவதை காரைக்கால் மேடு மீனவர்கள் பார்த்துள்ளனர். 3 விசைப்படகு, 3 ஃபைபர் படகில் சென்றவர்கள், அவர்களை மீட்டு தங்களது படகில் ஏற்றியுள்ளனர்.

இவர்கள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாகவும், மாலை 4  மணிக்குள் வந்துவிடுவார்கள் எனவும் காரைக்கால்மேடு  மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.