காரைக்கால்: ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்குப் பின் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நாளடைவில் அதிகரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கும் நிலை உருவானது. பரிசோதனையில் சிலருக்கு காலரா உறுதிப்படுத்தப்பட்டது. பெரும்பான்மையினர் ஒரு நாள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இப்பிரச்னையையொட்டி புதுவை சுகாதாரத் துறை பொது சுகாதார அவசர நிலை பகுதியாக காரைக்காலை அண்மையில் அறிவித்தது.
இந்த சூழலிலும் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு வந்து ஆய்வு செய்யவில்லை. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முன்வரவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு 11.15 மணியளவில் வந்தார். பூவம் பகுதி மாவட்ட எல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் திருநள்ளாறு சாலையில் உள்ள மத்திய மண்டல குடிநீர் தேக்கத் தொட்டியை முதல்வர் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள், தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதையும், குடிநீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி, குளோரின் கலப்புப் பணிகள், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கசிவுகளை சீரமைத்தல் என மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
இதைத் தொடர்ந்து அரசு பொது மருத்துவமனைக்கு ஆய்வுப் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு அரசுத்துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.