காரைக்கால்: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கட்டுப்பாட்டில் உள்ள அமையா என்கிற ரோந்துக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகப்பட்டினத்துக்கு கிழக்கே இந்திய கடல் எல்லையில் படகு மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கண்டு அப்பகுதிக்கு சென்றனர். அது இலங்கையை சேர்ந்த படகு என்பது உறுதி செய்யப்பட்டது. படகிலிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியபோது, இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்து காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை அழைத்துவந்தனர்.
காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் மற்றும் நாகை கடலோர காவல் குழுமத்தினருடன் விசாரணை மேற்கொண்டனர். படகு அனுரா என்பவருக்கு சொந்தமானது என்றும், படகில் வந்தவர்கள் மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா என்பதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரையும் நாகை கடலோர காவல் குழும காவல்துறையினரிடம் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர்.