காரைக்கால்: காரைக்கால் அருகே கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது விஷப் பூச்சி கடித்ததில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூர் பகுதியில் சோழன்குறிச்சி சாலை அருகே அய்யனார் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கோயில் அருகே இருந்த ஆல மரத்திலிருந்து பறந்து வந்த பூச்சிகள் பக்தர்கள் சிலர் மீது கடித்துள்ளது. இதனால் பலருக்கு மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
கூட்டமாக பறந்து வந்த பூச்சியை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பகுதியிலிருந்து வேகமாக வெளியேறினர். அங்கிருந்த காவலர்கள், பாதிக்கப்பட்டவர்களை திருநள்ளாறு மருத்துவமனைக்கும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்!
இதில், சிறுவர்கள், பெண்கள் 5 உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை புதுவை முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.