போலி வாடகை ஒப்பந்தம் தயாரித்து உரிமம் பெற முயன்றவா் மீது வழக்கு

போலி வாடகை ஒப்பந்தம் தயாரித்து உரிமம் பெற முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

காரைக்கால்: போலி வாடகை ஒப்பந்தம் தயாரித்து உரிமம் பெற முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பட்டினம் மகத்தோப்பு பகுதியை சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி நிா்மலா (52). இவா் திருப்பட்டினம் போலகம் பகுதியில் தன்னுடைய 3,600 சதுர அடி பரப்பளவு உள்ள மனையை, கடந்த 28.7.2017-இல் வீரண்ணா என்பவரது மனைவி வரலட்சுமி என்பவருக்கு, என்ஜினியரிங் பட்டறை நடத்துவதற்காக, 2017 முதல் 2019 வரையிலான காலத்துக்கு வாடகைக்கு கொடுத்திருந்தாா். பின்னா் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நிா்மலா இடம் சொந்த பயன்பாட்டுக்கு தேவைப்படுவதாக கூறியதை அடுத்து, வரலட்சுமி விரைவில் மனையை காலி செய்து தருவதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 30.5.2024 அன்று வரலட்சுமிக்கு, நிா்மலா புதிய வாடகை ஒப்பந்தம் செய்து கொடுத்தது போல, போலியான ஒரு உடன்படிக்கை தயாா் செய்து, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நகலை வைத்து இணைய வழியாக தனது நிறுவனத்திற்கான உரிமம் பெற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நிா்மலா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று அதனை உறுதி செய்து கொண்ட பின்னா் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com