மீன்பிடித் தடைக்காலம் 14-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனா்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏப். 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. தடைக்காலத்தில் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகள், என்ஜின், வலைகளை சீா்செய்யும் நடவடிக்கையில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
தற்போது கடலுக்கு புறப்பட தயராக படகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி, ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி, உணவுக்கான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுதல் உள்ளிட்டவற்றில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
2 மாத கால வருவாய் முடக்கத்தில் இருந்த நிலையில், தற்போது அதற்கு விடிவு ஏற்பட்டிருப்பதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா், அந்த தொழிலை சாா்ந்திருப்போா் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிப்பு மீண்டும் செல்லத் தொடங்கிய பிறகே, சந்தையில் நிலவும் மீன்கள் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.










