கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் மூதாட்டியின் 100 வது பிறந்த நாள் விழாவில் கிராமமே கலந்துகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர தற்க்கஸ் கிராமம் உத்ராபதி கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராசு பிள்ளை மனைவி கோவிந்தகமலத்தம்மாள். இவரது கணவர் கோவிந்தராசு கடந்த 1994ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். கோவிந்தகமலத்ம்மாளுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், மருமகன், மருமகள், பேரன்-பேத்திகள் கொள்ளுப்பேரன், எள்ளுபேரன், குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உள்ளனர்.
கோவிந்தகமலதம்மாளுக்கு 100வது வயது துவங்குவதையொட்டி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 100வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கியும் விருந்து உபசரிப்பு செய்தும் பிறந்தநாள் விழா கொண்டாடினர். 100 வது பிறந்தநாள் காணும் கோவிந்தகமலத்தம்மாளை இதுவரை எந்த நோயும் எட்டிக்கட பார்க்கவில்லை.
கரோனா காலத்தில்கூட கொஞ்சம் கூட அஞ்சாமல் மகிழ்ச்சியாக அந்த நோயை விரட்டி அடித்து உள்ளார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எந்த நோயும் வந்தது கிடையாது. கண் பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது. இதுவரை கண்ணாடி அணிந்து கொண்டது கிடையாது. இதுவரை மருத்துவமனைக்கு சென்றதும் கிடையாது.மருந்து சாப்பிட்டதும் கிடையாது.ஆனால் திடகாத்திரத்துடனும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சைவம் மற்றும் அசைவ உள்ளிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் அடைந்து விடுகிறது. 100-வது பிறந்தநாள் காணும் கோவிந்தகமலம்மாள் பாட்டி இளமையின் ரகசியம் குறித்து கூறுகையில், ஆரம்பகாலம் முதல் நான் கடின உழைப்பில் ஈடுபட்டு வருகிறேன். எனது கடின உழைப்பே நான் நீண்ட வருடங்கள் வாழ்வதற்கு காரணம். எனக்கு வேண்டிய உணவு முதலியவற்றை நானே சமைத்துக் கொள்கிறேன்.
ஆரம்ப காலம் முதல் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களே எனது பிரதான உணவாக இருந்துவந்தது. காலப்போக்கில் தற்போதுள்ள உணவு வகை சற்று மாறியுள்ளது. நான் மனதில் எந்த கோபமும் கொள்வதில்லை. எதையும் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்வேன்.
இதுவே எனது இளமையின் ரகசியம் என்றார். பிறந்த நாள் விழா காணும் கோவிந்தம்மாள் வீட்டிற்கு சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத்தலைவர் பானுசேகர் மற்றும் தற்காஸ் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரில் வந்து காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர். கோவிந்த கமலத்தம்மாளின் நூறாவது பிறந்த நாள் விழாவையொட்டி கிராமமே கோலாகலமாக காணப்பட்டது.