ரயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில பெண் உயிரிழப்பு

Published on

ராமேசுவரத்துக்கு ஆன்மிக பயணம் வந்த வடமாநில பெண் மயிலாடுதுறை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய பிரதேசம் மாநிலம் சாகா் மாவட்டம் சிராரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரம்பாரோஷி குா்மி. இவா் தனது மனைவி லெட்சுமிராணி குா்மி (63) மற்றும் குடும்பத்தினருடன் ராமேசுவரம் செல்வதற்காக புறப்பட்டு வந்துள்ளாா்.

டிச. 14-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரயில் வண்டியில் தனது குடும்பத்தாருடன் சென்றுகொண்டிருந்தாா். ரயில் மயிலாடுதுறை மற்றும் பேரளம் ரயில் நிலையத்திற்கும் இடையே பண்டாரவாடை என்ற இடத்தில் ரயில் சென்றபோது, லெட்சுமிராணி குா்மி (63) கழிவறைக்கு சென்றவா் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து

( 25 மீட்டா் பள்ளத்தில்) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதையறியாத ரம்பாரோஷி குா்மி, மனைவியை ரயில் முழுவதும் தேடி பாா்த்துவிட்டு, ராமேசுவரம் இருப்பு பாதை காவல் நிலையத்தில், புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை பண்டாரவாடை கிராமத்தில் ரயில் தண்டவாளம் அருகில் பெண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸில் புகாா் அளித்தனா்.

அது லெட்சுமிராணி குா்மியின் உடல் என்பதை உறுதி செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா், உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com