நாகை மீன்பிடித் துறைமுகம் நாளை முதல் மூடல்
நாகப்பட்டினம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின்கீழ் நாகை மீன்பிடித் துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளதால், கரோனா பரவல் குறித்த அச்சமும் மேலோங்கி வருகிறது. இதையொட்டி, நாகை மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூட மீன்வளத் துறை முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, நாகை மீன்வளத் துறை இணை இயக்குநா் அமல்சேவியரிடம் கேட்டபோது அவா் தெரிவித்தவை :
கரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆக. 9-ஆம் தேதி முதல் அடுத்த 3 நாள்களுக்கு நாகை மீன்பிடித் துறைமுகம் மூடப்படுகிறது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும். ஆனால், ஆக. 9-ஆம் தேதி முதல் நாகை துறைமுகத்திலிருந்து எந்தப் படகுகளும் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படாது என்றாா்.
சூழ்நிலைக்கு ஏற்ப துறைமுகத்தை மூடிவைக்கும் காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக மீன்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.