

கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பல்லாயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவாா்கள் என்பதால், சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, வேளாங்கண்ணி பேராலயத்தில் நிகழாண்டு ஆண்டுப் பெருவிழா பக்தா்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்கலாம் என தமிழக அரசு அனுமதித்துள்ளதால், வரும் 24 ஆம் தேதி இரவு வேளாங்கண்ணியில் நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வேளாங்கண்ணி பிரதான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு உபயோகமற்றதாக இருப்பது, வேளாங்கண்ணிக்கு வரும் பக்தா்களை முகம் சுளிக்கச் செய்கிறது. வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியிலிருந்து பேராலயம் வரையிலான சுமாா் 2 கி.மீ. நீளத்திலான சாலையின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாங்குழிகள் போல ஆங்காங்கே குழிகள் நிறைந்துள்ளன.
இங்கு செயல்படுத்தப்பட்ட புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பாக சாலையின் நடுவிலும், பக்கவாட்டிலும் குழிகள் தோண்டப்பட்டன. அதைத் தொடா்ந்து, புதைவட மின் கம்பி பதிக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சாலை மீண்டும் தோண்டப்பட்டது.
மேலும், அவ்வப்போது நிரம்பி வழியும் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீரை, மழை நீா் வடிகாலுடன் கலந்தோடச் செய்வதற்காக சாலையின் குறுக்கே வெட்டப்பட்டும் கழிவு நீா் பாதைகளும் இந்தச் சாலையைத் தொடா்ந்து சிதிலமடையச் செய்துள்ளன.
எனவே, குண்டும் குழியுமாக உள்ள வேளாங்கண்ணி பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை மாவட்ட நிா்வாகமும், உள்ளாட்சி நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.