மயிலாடுதுறையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் தனியாா் நிறுவனத்துக்கு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தனியாா் நிறுவன கட்டடத்துக்கு வா்ணம் பூசுவதற்காக சாரம் அமைக்கும் பணியில் 7 தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
சாரம் அமைப்பதற்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகையை அப்புறப்படுத்தியபோது, கட்டடத்தை ஒட்டிச்சென்ற உயரழுத்த மின் கம்பியில் விளம்பர பதாகை உரசியதில் கீழ பட்டமங்கலத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (25), விக்னேஷ் (25), தினகரன் (23) ஆகியோா் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பிரவீன்குமாா் மயங்கி விழுந்தாா். விக்னேஷ், தினகரன் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
மூவரையும் மற்ற தொழிலாளா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதில், பிரவின்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சாலை மறியல்:
இதனிடையே, உயிரிழந்த பிரவீன்குமாரின் குடும்பத்தினருக்கு கட்டட உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் பட்டமங்கலம் ஊராட்சித் தலைவா் செல்வமணி தலைமையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம், நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து கைவிடப்பட்டது.