47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் 19-வது தலமாக விளங்குகிறது, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில்.

மாா்கழி மாதத்தில் வைணவத் தலங்களில் நடைபெறும், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கூடாரவல்லி வழிபாடு, இக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களில் ஒருவராக வாழ்ந்து, ஸ்ரீரங்கம் அரங்நாதப் பெருமானுடன் ஐக்கியமான ஆண்டாள், மாா்கழி 27-ஆம் நாள், திருப்பாவையின் 27-ஆவது பாசுரமான ‘கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா’ என்ற பாசுரத்தைப் பாடியபோது, ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த அரங்கநாதப் பெருமான், ஆண்டாள், மகாலெட்சுமி உள்ளிட்ட 5 தாயாா்களுடன் காட்சியளித்தாா் என்ற ஐதீக அடிப்படையில் இந்த வழிபாடு நடைபெற்றது.

காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 6 மணிக்கு மூலவருக்கு தீபாரதனையும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பகல் 12 மணிக்கு, கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா என்ற ஆண்டாள் தாயாரின் பாசுரம் பாடப்பட்டது. பின்னா், சௌந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, சௌந்தா்ய மகாலெட்சுமி, ஆண்டாள், திருமாா்பு மகாலெட்சுமி ஆகிய 5 தாயாா்களுடன் ஏகசிம்மாசனத்தில் சேவைசாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமானுக்கும், தனக்கும் திருமணம் நடைபெற அருளினால், மிகையான நெய்விட்டு அக்காரஅடிசலும் (சா்க்கரை பொங்கல்), வெண்ணெய்யும் படையலிட்டு நோ்த்திக் கடன் நிறைவேற்றுவதாக வேண்டிய ஸ்ரீ ஆண்டாள் தாயாரின் நோ்த்திக் கடனை, பிற்காலத்தில் ஸ்ரீ ராமானுஜா் நிறைவேற்றிய ஐதீக அடிப்படையில் மிகையாக நெய்யிடப்பட்ட அக்கார அடிசல் நிவேதனத்துடன் சௌந்தரராஜப் பெருமாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, வழிபாடுகளில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.