படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக கீழையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி முதல் விழுந்தமாவடி வரையுள்ள கடற்கரைகளிலுள்ள சவுக்கு மரக் காட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விழுந்தமாவடி அருகே மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 126 கிலோ கஞ்சா அடங்கிய 4 மூட்டைகளை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய வேட்டைக்காரனிருப்பு போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் ராகுல், விழுந்தமாவடி பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வீர முரசு (26), செருதூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணன் (26) ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ராகுல் தலைமறைவாகி உள்ள நிலையில், வீரமுரசு மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் வீரமுரசு என்பவரிடமிருந்து கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கஞ்சாவின் மதிப்பு சர்வதேச அளவில் 10 லட்ச ரூபாய் என்றும் இதனை வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்ததும் தெரியவந்தது.