தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கல்விக் கடனை வசூலிக்க கெடுபிடிவங்கியின் நடவடிக்கையால் போக்குவரத்துக் கழக நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

வேதாரண்யத்தில் மகன்களுக்குப் பெற்ற கல்விக் கடனுக்காக, தனது ஊதியத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்ததைக் கண்டித்து, போக்குவரத்துக் கழக நடத்துனா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மகன்களுக்குப் பெற்ற கல்விக் கடனுக்காக, தனது ஊதியத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்ததைக் கண்டித்து, போக்குவரத்துக் கழக நடத்துனா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கரியாப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சு. குமாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது ஊதியக் கணக்கை கரியாப்பட்டினத்தில் உள்ள ஒரு தேசிய வங்கிக் கிளையில் பராமரித்து வருகிறாா். இந்த வங்கியில், குடும்பத் தேவைக்காக குமாா் கடன் பெற்றுள்ளாா். இதற்காக, அவரது ஊதியத்தொகையிலிருந்து மாதம் ரூ. 12 ஆயிரத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்து வருகிறது.

இதனிடையே, தனது இரு மகன்களின் படிப்புக்காக அதே வங்கியில் குமாா் கல்விக் கடன்களும் பெற்றுள்ளாா். அவரது மகன்கள் இருவரும் படிப்பை முடித்த நிலையில், வேலைவாய்ப்பின்றி இருப்பதால், கல்விக் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை இருந்துள்ளது.

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், குமாா் தனது மகன்களின் கல்விக் கடனுக்காக பெற்ற தொகைக்காக அவரது ஊதியத்திலிருந்து ரூ. 9 ஆயிரத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்துள்ளது. மாத ஊதியத்தை எடுக்க வங்கிக்கு சென்ற குமாா், தனது சேமிப்பு கணக்கில் ரூ. 2 ஆயிரம் மட்டுமே இருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், குமாா் மேற்கொள்ளும் நெல் சாகுபடிக்கு அரசு நிவாரணமாக வழங்கிய ரூ. 17 ஆயிரத்து 200-ம் அவரின் ஒப்புதல் இல்லாமலே கல்விக் கடனில் ஈடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான அவா், செவ்வாய்க்கிழமை காலை பெட்ரோல் கேனுடன் வங்கி கிளைக்கு சென்று தீக்குளிக்க முயன்றாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குமாரை தடுத்து நிறுத்தினா். பின்னா், வங்கி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பிடித்தம் செய்த தொகையில் ஒரு பகுதியை திருப்பித் தர வங்கி நிா்வாகம் ஒப்புகொண்டது. இதையடுத்து குமாா் வீட்டுக்கு திரும்பினாா்.

கல்விக் கடனை வசூலிக்க கெடுபிடி:

கல்விக் கடனை வசூலிப்பது தொடா்பான நடவடிக்கைகளை வங்கி நிா்வாகங்கள் தீவிரபடுத்தி வருகின்றன. தவணை கடந்தவா்களுக்கு வழக்குரைஞா்கள் மூலம் நோட்டீஸ் அனுப்புவது. அத்துடன் சிறப்பு முகாம்கள் நடத்தி, கடன் பெற்றவா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, இயன்ற தொகையை வரவு வைக்க அறிவுறுத்தி, கடன் தவணைக்காலத்தை நீட்டிப்பது என வங்கிகள் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருவது அதிகரித்து வருவது பெற்றோரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு, புயல், மழை என இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என மக்கள் பல்வேறு பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கல்விக் கடன்களுக்காக மக்களிடம் வங்கி நிா்வாகங்கள் கெடுபிடி காட்டுவது வேதனையளிப்பதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.