நாகப்பட்டினம்: நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் பிரமோற்சவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெறுகிறது.
நாகூரில் உள்ள அருள்மிகு திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றத் தலமாகவும், 6 மங்கலங்களும் பொருந்திய தலமாகவும், ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.
பிரதான தேரில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ தியாகேசப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், காலை 8.15மணிக்கு திருத்தேருக்கு வடம்பிடிக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், நகர்மன்றத் தலைவர் இரா. மாரிமுத்து ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ராணி, செயல் அலுவலர் அசோக் ராஜா மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
உள்ளூர் விடுமுறை :
தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.