நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, ரூ. 2.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறாவை பறக்கவிட்டனர்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரசு துறைகள் சார்பில் ரூ.2.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.