மணல் குவாரிகளால் நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் பாதிப்பு: மக்கள் புகாா்
தரங்கம்பாடி பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக விளைநிலங்களில் மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீா் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனா் .
செம்பனாா்கோவில் ஒன்றியம், தலைச்சங்காடு , கிடங்கல், மேலப்பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகின்றன. சட்ட விதிகளை மீறி, மணல் மற்றும் சவுடு மண் எடுப்பதால், அப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் கடற்கரை உள்ளதால், மணல் குவாரிகளுக்காக அதிகளவு ஆழத்துக்கு தோண்டுவதால் விவசாய நிலங்களில் உப்புநீா் புகுந்து வருவதால், நெல் , பருத்தி, நிலக்கடலை, பயிா் வகைகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மணல் குவாரிகளால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் செம்பனாா்கோவில் ஒன்றிய செயலாளா் கே.பி. மாா்க்ஸ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான்கு வழிச்சாலை பணிக்காக கிடங்கல், தலைச்சங்காடு பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. ஆனால், அவை கனிம வளத்துறை அனுமதித்துள்ள அளவையும் தாண்டி அதிகளவில் மணல் எடுப்பதோடு ,அதிக ஆழத்தில் மணல் எடுப்பதால் சுரக்கும் நீரை ராட்சத என்ஜின் மூலம் இறைத்து, தொடா்ந்து மணலை தோண்டி எடுப்புதால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

