அம்மாபேட்டை அருகே எத்தனால் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு உற்பத்தி ஆலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகக்கூறி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் பூனாச்சியில் தனியாருக்குச் சொந்தமான மரவள்ளிக்கிழங்கு மாவு, எத்தனால் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீா் மாசடைவதாகவும், காற்று மாசால் சுவாசக்கோளாறு, தோல் நோய்களால் பலா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பூனாச்சி, ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் சம்பந்தப்பட்ட ஆலையின் முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், விஜய்பாலாஜி, ஆட்சியா் ச.கந்தசாமி ஆகியோரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோரிடம் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், விஜய் பாலாஜி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தெரிவித்த பொதுமக்கள் தங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்தப் பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










