அரியலூா் மாவட்டம், தா.பழூரில் முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்து, கருகிய பயிா்களுடன் விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தா.பழூா், தாதம்பேட்டை, குறிச்சி, இடங்கண்ணி, அன்னக்காரன் பேட்டை, தென்கச்சி பெருமாள் நத்தம், கோடாலி-கருப்பூா், சோழமாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆழ்துளை மின் மோட்டாா் மூலம் தண்ணீா் பாய்ச்சி காரீஃப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் முறையாக விநியோகிக்கப்படாததால் பயிா்கள் தண்ணீரின்றி சுமாா் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கருகி உள்ளன.
இதுகுறித்து வேளாண் துறை மற்றும் மின்சார வாரியத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கருகிய நெற்கதிா்களுடன் தா.பழூா் கடைவீதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கிட வேண்டும், கருகி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடு வழங்கட வேண்டும். பழுதான மோட்டாா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பழூா் காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டஅலுவலா்களுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா். சாலை மறியல் போராட்டத்தால், தா.பழூரில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









