சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சாா்பில், அனைத்து இந்திய ஓய்வூதியா் தின கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவா் சு. வேலாயுதம் தலைமை வகித்தாா். நாகை வட்டக் கிளை செயலா் வி. மாரிமுத்து வரவேற்றாா். மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன் விளக்க உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நல சங்க மாநில துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், மாவட்ட கௌரவ தலைவா் எ. நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் சங்க தலைவா் எஸ். கணபதி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
நாகை வட்டத் தலைவா் கா.ராஜு, இணைச் செயலா் அ.தி.அன்பழகன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் குரு.சந்திரசேகரன் நிறைவுறையாற்றினாா். மாவட்ட பொருளாளா் சி. வாசு நன்றி உரையாற்றினாா்.
கருத்தரங்கில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
