நாகையில் மீன்கள் விலை உயா்வு
நாகப்பட்டினம்: நாகையில் வெள்ளிக்கிழமை மீன்களின் விலை அதிகம் இருந்த நிலையிலும், பொதுமக்கள், வியாபாரிகள் மீன்கள் வாங்க அதிகளவில் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்தனா்.
மாட்டுப் பொங்கல் நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலன்று முன்னோா்களுக்கு பிடித்த அறுசுவை உணவு, அசைவ உணவு வகைகளை படைத்து வழிபடுவது வழக்கம் என்பதால், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனா்.
நாகை நகரப் பகுதி மட்டுமின்றி நாகூா், சிக்கல், கீழ்வேளூா் மற்றும் திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனா். துறைமுகம் முழுவதும் மீன்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தாலும், விலை அதிகம் இருந்தது. ஆனால், விலையை பொருட்படுத்தாமல் மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா்.
இதேபோல நாகூா், சாமந்தான்பேட்டை, நம்பியாா் நகா், செருதூா், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களிலும் அந்தந்த கடற்கரை பகுதிகளில் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். மேலும் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை மீன்கள் விலை விவரம்: இறால் ரூ. 600, கனவா ரூ. 350-400, நண்டு ரூ. 550 முதல் 850, வஞ்சிரம் ரூ. 850, வாவல் ரூ. 750 முதல் 1,300, சங்கரா ரூ. 450, சீலா ரூ. 450, கிழங்கான் ரூ. 350, நெத்திலி ரூ.300, பாறை ரூ. 550, கடல் விரா ரூ. 600, பால் சுறா ரூ. 700, திருக்கை ரூ. 300 என்ற விலையில் விற்பனையானது.

