நாகை மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: :
நாகப்பட்டினம் தீயணைப்புத்துறை சாா்பில் தீயணைப்பு நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு வாங்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதில் நான்கு குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரு நாள்களும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், தீயணைப்புக் கருவிகளை இயக்குவது பற்றியும், சமையல் எரிவாயு பயன்படுத்தும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது பற்றியும், விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளது.
மேலும் வாகன விபத்து, பட்டாசு தீ விபத்து ஆகியவை ஏற்பட்டால் அணைப்பது குறித்தும், விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும் விரிவான வகுப்பு நடத்தப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் குழுவில் வேண்டுமானாலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.









