திருவாரூர் மாவட்டத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க நடவடிக்கை: சமூகநல அலுவலர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் மறைமுகமாக நடக்கும் பெண் சிசுக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங் கூறினார்.
குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங் தலைமை வகித்துப் பேசியது: தமிழகத்தில் 18 வயதுக்குள்பட்ட அனைவரும் குழந்தைகளாக கருதப்படும் நிலையில், பெண் குழந்தைகள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாமல் இருக்க தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண் குழந்தை மோகத்தை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சமூக நலத்துறை உதவும். குழந்தைகள் திருமணத்துக்கு தடை, உறவு முறை திருமணங்களில் 18 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்வது ஆகியவற்றை அரசு தடுத்து வருகிறது.
தமிழகத்தில் எங்கோ ஒரு இடத்தில் பெண் சிசுக் கொலை நடப்பதாகக் கூறுகிறோம். ஆனால், திருவாரூர் மாவட்டத்திலும், பக்கத்து மாவட்டங்களிலும் மறைமுகமாக பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பெண் சிசுக் கொலைகள் குறைந்துள்ளன என்றார்.
விழாவில், குழந்தைகள் நல தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மணிமேகலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வி, சைல்டு லைன் ஒருங்கினைப்பாளர் முருகேசன், தகவல் பகுப்பாளர் வித்யா, பள்ளி தலைமை ஆசிரியை ஜீவரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
