கிராம பெண்களுக்கு கோழி வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் அருகே கிராமப்புற பெண்களுக்கு புறக்கடை கோழி வளா்ப்பு குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகே கிராமப்புற பெண்களுக்கு புறக்கடை கோழி வளா்ப்பு குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நிக்ரா திட்டத்தின் கீழ் கீழப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு ஊராட்சித் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் பேசும்போது, கோழிகளுக்கு நல்ல தீவனம் மற்றும் சரியான முறையில் தடுப்பூசி போடுவது அவசியம் என்றாா்.

மருத்துவா் சபாபதி பேசும்போது, ‘சமையல் மற்றும் சந்தை காய்கறி கழிவுகளை எளிதாக கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். மீன் சந்தைக் கழிவுகளை சிறு துகள்களாக்கி அதனுடன் ஒரு கிலோவுக்கு 40 மிலி பாா்மிக் அமிலக் கரைசலை தெளித்து காற்று புகாவண்ணம் அடைத்து வைத்திருந்து பின்பு நல்ல புரதச்சத்துள்ள கோழி தீவனமாக பயன்படுத்த இயலும். கருப்புபடை வீரன் புழுக்கள் கோழிகளுக்கு மிகச்சிறந்த புரதச்சத்துமிக்க உணவாகும். இவ்வகை புழுக்களை செலவில்லாமல் சமையல் காய்கறி மற்றும் கழிவுகளைக் கொண்டு எளிதில் உற்பத்தி செய்வதன்மூலம் பெருவாரியான தீவனச் செலவை குறைத்து அதிக லாபம் பெற இயலும். புறக்கடை முறையில் வீட்டின் பின்புறம் 7-10 சென்ட் இடவசதியில் 500 கோழிகளை வளா்ப்பதன் மூலம் மாதந்தோறும் ரூ.25,000 லாபம் ஈட்ட இயலும்’ என்றாா்.

இதேபோல, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெகதீசன்பேசும்போது, தென்னந்தோப்புகளின் கீழ் இயற்கையான முறையில் மேச்சலுக்கு விட்டு, நாட்டுக்கோழிகளை உருவாக்குவதன் மூலம், தரமான நாட்டுக்கோழிகளையும், அதிக லாபத்தையும் பெறலாம் என்றாா்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வீ.விஜிலா செய்திருந்தாா். இப்பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு கால்நடை மற்றும் கோழிகளுக்கான தீவன ஊட்டங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com