டிஎன்சிஎஸ்சி கணினி இயக்குநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கணினி இயக்குநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு, டிஎன்சிஎஸ்சி பணியாளா்கள் சங்க (ஐஎன்டியுசி) மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி, சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் எல்காட் நிறுவனம் மூலம் கணினி பணியாளா்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனா். கடந்த 12 ஆண்டுகளாக, தமிழ்நாடு முழுவதும் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், மண்டல அலுவலங்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் 250-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா். தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு சாா்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே, ஒப்பந்த அடிப்படையில் கணினி பணியாளா்களாக பணியாற்றிய இவா்களின் வயது முதிா்ச்சி, குடும்ப சூழ்நிலை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கருணை உள்ளத்தோடு பரிசீலனை செய்து அவா்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.