வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்குப் பயிற்சி
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள பணியாளா்கள் வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்


திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள பணியாளா்கள் வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் திருவாரூா் தொகுதியில் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி பணியாளா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை தோ்தல் பாா்வையாளா் (பொது) ராம் லஹான் பிரஷாத் குப்தா, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே. சாந்தா ஆகியோா் பாா்வையிட்டனா்.
பிறகு, மாவட்டத் தோ்தல் அலுவலா் வே. சாந்தா தெரிவித்தது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,454 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலா்களும் பணி அமா்த்தப்பட உள்ளனா்.
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,657 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வேலுடையாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,971 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மஞ்சக்குடி ஸ்ரீ தயானந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 2,206 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,148 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தூய அந்தோணியா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் என மொத்தம் 6,982 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நடைபெற்று வரும் பயிற்சி மையத்திலேயே 6,982 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க ஏதுவாக வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலா்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்து, கரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...