நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர்கோயிலில் திருவாரூர் மாவட்ட சாம்பியன் ஷிப் சதுரங்க போட்டி சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
சித்தர்வேடம் பூண்டு சிவபெருமான் திருநெல்வேலி மன்னன் வசுசேனன் மகள் ராஜாராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று ராஜாராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட வரலாறு உடையது இக்கோயில். இக்கோயிலில் தென்பரை ஆர்.கிருஷ்ணசாமி நினைவு கோப்பைக்கான 25 வது திருவாரூர் மாவட்ட சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டி சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற்றது.
இப்போட்டியில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர்,சேலம், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.
9,11,13,15 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் துவக்க விழாவிற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் அ.சுரேன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிமோகன், ஊராட்சிமன்றத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறநிலைய இணை ஆணையர் ராமு, திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் என்.சாந்தகுமார், துணைத் தலைவர்கள் பாலன், முரளிதரன், செயலாளர் பாலகுணசேகரன், இணைச்செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவி!
இப்போட்டியில் பொதுப்பிரிவில் வெற்றிபெற்ற வீரர்கள் வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் சதுரங்கப்போட்டியிலும், 13 வயதுக்குள் உள்ளவர்களுக்கான பிரிவில் வெற்றி பெற்றவர்கள் வரும் 31 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.