மன்னார்குடி: மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்று 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது , திருவாரூர் அதிமுக மாவட்டச் செயலராகவும் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
இந்நிலையில், ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த 7.4.2005 ஆம் ஆண்டு முதல் 31.3.2021 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி (500%) சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.
அப்பொழுது, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜர் வீட்டில் இருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை அறிந்ததும், அதிமுக வழக்கறிஞர்கள் வீட்டிற்கு வந்து அவர்களிடம் விளக்கம் கேட்டனர்.
மேலும், செய்தி அறிந்த அதிமுகவினர் மாவட்ட முழுவதிலிருந்தும் மன்னார்குடிக்கு வந்த காமராஜ் வீட்டின் முன்பு குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் திமுகவை கண்டித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தும் அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படுவதாக கண்டித்து முழக்கமிட்டனர்.
மன்னார்குடியில் மட்டும்
1. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் . 2. சகோதரர் முன்னாள் காவல் ஆய்வாளர் ஆர்.நடனசிகாமணி, 3. உறவினர் ராஜகோபால், 4. வழக்குரைஞர் எஸ்.உதயகுமார், 5. பைங்கா நாடு ராதாகிருஷ்ணன் , 6. வல்லூர் குட்டிமணி , 7. ஏ.வி, பி. கோபி , 8. வேட்டைத் திடல் ஊராட்சி தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி , 9. புதுப் பாலம் கிருஷ்ணமூர்த்தி , 10. நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் டி.என்.பாஸ்கர் , 11. முன்னாள் தலைமைச் செயலக அதிகாரி ஆலங்கோட்டை தேசபந்து , 12. மூவாநல்லூர் லோக.அறிவழகன் , 13. தளிக்கோட்டை கிருஷ்ணகுமார் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் .
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் , மகன்கள் மருத்துவர் இன்பன், மருத்துவர் இனியன், வழக்குரைஞர் எஸ்.உதயகுமார், பி.கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டி ஆர்.சந்திரசேகரன் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: பதவி உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
ஆர்.காமராஜ் வீட்டின் முன் குவிந்துள்ள கட்சி தொண்டர்களுக்கு காலை சிற்றுண்டி பொட்டலம் , தின்பண்டங்கள், குளிர்பானம் , தண்ணீர் பாட்டில் , மத்தியம் உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியினர் அமர்வதற்காக .ஆர்.காமராஜ் வீட்டின் அருகிலும், எதிரிலும் துணிப் பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு சோதனையை கண்டித்து அவ்வப்போது ஆர்ப்பாட்டமும், சாலை மறியலிலும் கட்சியினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் மதியம் 2 மணி வரை சோதனை தொடர்ந்து வருகிறது.